இது ஒரு (அன்புச்) சங்கிலித் தொடர்.
நிலாவும் அம்மாவும் தொடங்கி வைத்து, கை நீட்ட அன்போடு கோர்த்துக்கொண்டவர்களின் வரிசையில் நானும்.
என் கையை அன்போடு இழுத்து இணைத்தவர் நண்பர் அ.மு.செ.
இதுவரை இணைந்தவர்கள்
ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்
குமரை நிலாவன்
சிந்துகா
தேவா
வேத்தியன்
அபு அஃப்ஸர்
அ.மு. செய்யது
தமிழரசி
இராகவன் நைஜீரியா
என் தங்கை காயு
இனி என்னையும் நீங்கள் வாசிக்கலாம்.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ரொம்பப் பிடிக்கும். இது என் தாயார் அவர்கள் விருப்பப்பட்டு எனக்கு வைத்த பெயர் என்று என் தந்தை சொன்னதால். என்னுடைய முழுப்பெயர் செய்யது அகமது நவாஸுதீன். இதில் செய்யது அகமது - என் தாத்தாவின் (அப்பாவின் அப்பா) பெயரே எனக்கும். கூடுதலாக நவாஸுதீன்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ஒவ்வொரு முறையும் விடுப்பில் சென்று குழந்தைளைப் பிரிந்து வரும் போது கண் கலங்குவது உண்டு. கடைசியாக சென்ற ஜூலை மாதம்.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
சுமாரா இருக்கும். ரொம்ப பிடிக்கும்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.
4. பிடித்த மதிய உணவு என்ன?
மீன் என்றால் எனக்கு உயிர். மீன்ல என்ன செஞ்சாலும் (மீன் ஆனம், பொரிச்ச மீனு, மீன் புலுக்கல், மீன் 65, இப்டியே போனா லிஸ்ட் பெருசாகும்) ஒரு கட்டு கட்டுவேன். ஆனால் கண்டிப்பா ரசம் வேணும்க எனக்கு. கடைசியா கொஞ்சம் ரசம் ஊத்தி சாப்பிடலேன்னா எனக்கு திருப்தியா இருக்காது.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ஆமா. அதனால்தான் சிறு வயது முதலே என் நண்பர்கள் வட்டம் பெரிது. அது இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது.
6. கடலில் குளிக்க பிடிக்குமா, அருவியில் குளிக்க பிடிக்குமா?
உண்மையைச் சொன்னால் எனக்கு ஏரியில் குளிக்கத் தான் ரொம்ப பிடிக்கும். குளத்தில் நீச்சல் அடிக்கவும் ரொம்ப பிடிக்கும். மற்றபடி இவையிரண்டில் என்றால் அருவிதான்.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவரின் உடை. பின்னர் அவரின் நடவடிக்கை. ரொம்ப பந்தா பண்ற ஆளான்னு பார்ப்பேன்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்ச விஷயம்: பேசவேண்டிய நேரத்தில் மட்டும்தான் (கொஞ்சம் அதிகமாவே) பேசுவேன்.
பிடிக்காத விஷயம்: என்னுடைய பெரிய வீக்னெஸ் மறதி, இன்னொன்று, சில சமயங்களில் ரொம்ப எதார்த்தமானவன் என்ற நினைப்பில் ஏதாவது செய்யப்போய் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடும். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு இது ரொம்ப மாறிவிட்டது.
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
அன்பு வைப்பதில் அளவு நோக்காதவர்
என்னைப்பற்றி (அவர்களைப் பிரிந்து வெகுதொலைவில் இருப்பதால்) அளவுக்கதிகமாக கவலைப்படுவது. தன்னைப்பற்றி தேவையான அளவுகூட கவலைப்படாதது.
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
வேற யாருங்க. என் மனைவி மக்கள்தான்.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை கைலி, பனியன் மட்டும்தான் (அறையில் ஒய்வு எடுப்பதால்).
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
ராஜ் மியூசிக்ல "ஆத்திச்சூடி ஆத்திச்சூடி". எல்லாம் தமிழ் பற்றுதான் காரணம்.
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிறுவயது முதலே எனக்கு இளநீல நிறம் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
14. பிடித்த மணம்?
Givenchy – Blue Label - இதன் மனமே அலாதிங்க
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
பாலா - இவரைப்பற்றி சொல்லனும்னா சோழ நாட்டு விஷமம் கொஞ்சம் அதிகம்னு அவரே உண்மையை ஒத்துக்கொள்வார். கடல்புராவான இவர் நல்ல கவிதைப்புராவும் கூட. தரமான கவிதைகள் மட்டுமே தரக்கூடியவர்.
சாரதி - பொறியாளர். சுவாரசியமான பதிவர். அவருடைய வருஷம் ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம் பதிவைப் (நன்றி அபுஅஃப்ஸர் - அறிமுகம் செய்து வைத்ததற்கு) படித்து இவரைத் தொடர ஆரம்பித்தேன்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?
எதைச் சொல்ல, எதை விட. இவருடைய எல்லா பதிவுகளுமே எனக்கு மிகவும் பிடிக்கும். இவரின் முதல் சந்திப்பு படிக்க காதல் உருவம் பெற்று வந்தால் இவர் மேல் காதல் கொள்ளும். ஷேர் ஆட்டோ படித்த ஷேர் ஆட்டோவும் குலுங்கி குலுங்கி சிரிக்கும். போய்ப் பாருங்க.
17. பிடித்த விளையாட்டு?
Ball Badminton - பள்ளி, கல்லூரியில் அதிகம் விளையாடியது (பள்ளி அணித்தலைவனாக இருந்ததும் உண்டு). கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்.
18. கண்ணாடி அணிபவரா?
வெயில் ஜாஸ்தியா இருக்கும்போது அணிவது உண்டு. அதாங்க Sun Glass.
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
முன்பெல்லாம் எந்த புதிய படம் வந்தாலும் ஒரு தடவை பார்த்தே ஆகணும் எனக்கு. இப்ப பிரபலமான நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் மட்டும். நண்பர்கள் ரிஸ்க் எடுத்து பார்த்துவிட்டு நல்லா இருக்கு மச்சான்னு கேரன்டீ தரும் படங்கள். "யான் பெற்ற கஷ்டம் பெருக இவ்வையகம்" என்று நண்பர்கள் மாட்டிவிடுவதும் உண்டு. (உதாரணம்: வில்லு).
20. கடைசியாகப் பார்த்த படம்?
அயன் தான் கடைசியா பார்த்த புதிய தமிழ் திரைப்படம். பழைய படங்கள்னு பார்த்தா திருமலை. திரை அரங்கில் தசாவதாரம்.
21. பிடித்த பருவ காலம் எது?
நாட்டில் மழைக்காலம். அந்த சமயத்தில் நல்ல மழை பெய்யும்போது மல்லிகைப்பூ போன்ற சூடான சோறும், தேங்காய்ப்பால் ரசமும், கருவாடு பொரியலும், அதுதான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அமிர்தம். இங்கு மழை பெய்தால் பயம். Traffic Jam. ரோட்டில் போக முடியாது.
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இண்டர்நெட்ல மேயுரதோட சரிங்க. எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இப்போ இல்லை. கல்லூரியில் படிக்கும்போது பாலகுமாரனின் ரசிகன் (எனக்கு பாலகுமாரனை அறிமுகப் படுத்தியது நம்ம நட்புடன் ஜமால் தாங்க) நான்.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
என் குழந்தைகளின் அடுத்த புதிய போட்டோக்கள் வரும் வரை
24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - தொலைபேசியில் என் பிள்ளைகளின் பேச்சு.
பிடிக்காத சத்தம் - அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வரும் பீப் சத்தம் (Call waiting from Office).
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
உயரம் - 36,000 அடி (வானூர்தியில் பறந்தபோது)
நீளம் - அதிரையிலிருந்து ஜித்தாஹ். (சரியான தொலைவின் அளவு எனக்கு தெரியல. தெரிஞ்சவங்க சொன்னா என்னோட பொது அறிவை கொஞ்சம் வளர்த்துக்குவேன்)
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தெரியலேங்க. தேடிகிட்டு இருக்கேன்.
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்தான். அதனால் பல விசயங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றேன். (இப்பக்கூட பாருங்க எனக்குள்ள இருக்கும் கோபம் மேல் கோபம் கோபமாக வருகிறது).
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எங்க அப்பா (வாப்பா) மாதிரி. என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாய்.
31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
விடுப்பில் ஊருக்கு செல்லும்போது என் பிள்ளைகளுக்கு என் கையால் உணவு ஊட்ட. (இல்லன்ன சும்மா கோவப்படுவாங்க, வாப்பாவ பாரு, பிராக்கு பார்க்காமல் ஒழுங்கா சாப்பிடுங்க, சாப்பிடும்போது தண்ணி குடிக்காத, கீழ கொட்டாமல் வாய ஒழுங்கா மூடுங்க - இப்படி ஏதாவது என் பிள்ளைங்கல சொல்லிக்கிட்டு இருப்பாங்க)
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் என் மனைவியின் இரண்டு பிரசவங்களின் போதும் பத்து நாட்களுக்கு முன்பே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும், கதவு திறந்தபோது என் மனைவியின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே, அதுதாங்க எனக்கு வாழ்க்கை. "குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்". ஏன் என்றால் வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் பலனடையப் பாப்போம்.
என்னைத்தொடர்ந்து நான் உரிமையோடு வம்புக்கு பிடித்து இழுக்கும் கைகள்
பாலா
சாரதி